ஆடியின் அற்புதங்கள்

kamakshiimage
இந்துக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு, ஆடி மாதம் வந்தாலே பண்டிகைகளின் அணிவகுப்பு ஆரம்பமாகிவிடும்.ஆடி மாதப் பிறப்பு முதல் ,தை மாதம் மகர சங்கராந்தி வரை,பலவித வழிபாடுகளிலும், கொண்டாட்டங்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

ஆடி மாதத்தை பல தெய்வங்களுடன் தொடர்பு படுத்தி நம் முன்னோர்கள் பல விரதங்களை மேற்கொண்டு வழி பட்டு வந்தனர்.(அம்மன் வழிபாடு, ஆடிப்பூரம், ஆடிஅமாவாசை, ஆடிக்கிருத்திகை) நாமும் அவர்களை போல் பெருமை வாய்ந்த ஆடி மாதத்தில் இறைவனைத் துதித்து மகிழ்வோமாக!

நன்றே சொல்வோம்!
நன்றே செய்வோம்!

- Vasudha Murali.

ஆடியின் பெருமைகளும் வழிபாடுகளும்

ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம். இது தேவர்களுக்கு இரவாகும். தை முதல் ஆனி முடிய உத்தராயணம். இது தேவர்களுக்கு பகலாகும்.

ஆடிப் பதினெட்டு:

ஆடிமாதமே, தேவர்களின் மாலைக்காலம் (6 மணி முதல்– 8 மணி வரை) இந்த மாலை நேரத்தில் அனைத்து உயிருக்கும் அன்னையான அம்பிகையைத் துதித்து, அவள் அருளை வேண்டுகிறது மனித இனம். ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள். பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!” என்று வேண்டுகிறது.

மனிதகுலம் அந்த வேண்டுதலின்படி, அன்னையின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடியது. அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ‘ஆடிப் பதினெட்டு ‘ என்று கொண்டாடுகிறார்கள்.

பதினெட்டு என்ற எண் ‘ஜய’ த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும். மஹாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள், நதிக்கரைகளில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. எனவேதான், காவிரி அன்னைக்கு ‘ஆடிப் பதினெட்டு’அன்று நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகின்றனர்.

ஏகாதசி:

ஆடிமாதத்தில் அம்மன் கோயில்களில் குறிப்பாக மாரியம்மன் கோயில்களில் வேப்பஞ்சேலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது, தீமிதிப்பது, கூழ் வார்த்தல் போன்ற விசேஷமான வழிபாடுகள் நடைபெறுகிறது. ஆடிமாதத்தில் தேய்பிறை ஏகாதசி – யோகிநி ஏகாதசி. வளர்பிறை ஏகாதசி – சயிநி ஏகாதசி. ஆடிஅமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) ச்ரார்த்தம் செய்வது மிகவும் நல்லது.

சூரியன் திசைமாறி சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாதம். ஆகையால் ஆடி அமாவாசை தர்பணத்திற்கு மிகவும் உயர்ந்தகாலம். இதனால், பித்ருக்கள் மகிழ்ந்து நமக்கு சகல செல்வத்தையும் வழங்குவார்கள்.

குபேரனின் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பணியாளனான ஹேமமாலி என்பவன் தனது அழகான மனைவி மீது கொண்ட மையலால், வழக்கமான தனது பணியை மறந்து போனதால், குபேரனால் சபிக்கப்பட்டு குஷ்டரோக நோய் வந்து அவதியுற்றான். அப்போது ஆடிமாத தேய்பிறையில் வரும் யோகிநீ ஏகாதசி அன்று விரதம் இருந்து, நோயிலிருந்து விடுபட்டான். பிறகு குபேரனிடம் சென்று தன் பணியைத் தொடர்ந்தான். இதுவே யோகிநீ ஏகாதசி எனப்பட்டது.

திரிவிக்ரமனாகத் தோன்றி மஹாபலியின் கர்வத்தை அடக்கிய மஹாவிஷ்ணு அவனைப் பாதாளத்துக்கு அனுப்பியவுடன் திருப்பாற்கடலுக்குச் சென்று பாம்பணையில், ஆடிமாத வளர்பிறை ஏகாதசியில்தான் சயனித்தார். எனவே, இது சயநீ ஏகாதசி எனப்பட்டது.

ஆடிப்பூரம் :

கோயில்களில் ஆடிப்பூர உத்ஸவம் விசேஷமாக நடைபெறும். குறிப்பாக சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிமாத வள்ர்பிறை துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரையில் துளசியை வழிபட்டால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம் பெருகி, வாழ்க்கை வளமாகும்.

ஆடியும் ஆறுமுகனும்…

கலியுக வரதனாம் கந்த பெருமானுக்கு பல விரதங்கள் உண்டு. இருப்பினும், தட்சிணாயனம் தொடங்கும் ஆடிமாதத்தில் வரும்
கார்த்திகை விரதமும், உத்தராயணம் தொடங்கும் தை மாதத்தில்
வரும் கார்த்திகையும் பெரும் சிறப்புடையன.

கந்தனுக்கு பாலூட்டி வளர்த்த ஆறு கார்த்திகை பெண்களிடம், சிவபெருமான் “கார்த்திகை விரதம் இருக்கும் அனைவரின் குறைகளை எல்லாம் போக்கி, நல் வாழ்வு அளித்து, இறுதியில் முக்தியும் கொடுப்பேன் என்று வரமளித்தார்.”

எனவே தான் ஆடி மாதக் கார்த்திகையில் முருகப் பெருமானுக்கு விரதம் இருப்பது விசேஷமாகக் கருதப் படுகிறது.

 

Leave a Reply